முன்னுரை என் நண்பர் சிவசாமி அவர்கள், சமூகவியலிலும், நிர்வாக இயலிலும் முதுநிலைப் பட்டப்படிப்புப் படித்தவர். அரசுப்பணியில் உயர்ந்த பதவிகள் பலவற்றை வகித்தவர். மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர். சென்னை அண்ணாநகர் விஸ்வேஸ்வரய்யா கோபுரத்தைச் சுற்றி வந்து தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது அறிமுகமானார். நல்ல பண்பான மனிதர்தான் அவர், ஆனால் அவருக்கு மருத்துவர்கள் மீதும் அவர்கள் தரும் பரிசோதனைகள் குறித்தும் பெரும் அவநம்பிக்கையும் ஐயப்படும் மனதில் இருப்பதை அவருடன் உரையாடும் போது அறிந்து கொண்டேன். அது குறித்துச் சில சமயம் நாங்கள் இருவரும் விவாதித்துள்ளோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆய்வுகள் அனைத்துமே அனாவசியமானவை, தண்டச் செலவு என்ற தவறான எண்ணம் அவருக்கு மட்டுமல்ல, பொதுவாகவே அனைத்துத்தரப்பு மக்களிடமும் காணப்படுகிறது. ஒரு நோயாளி, திடீரென மருத்துவர் முன்பு போய் நின்று கொண்டு “எனக்கு என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்” என்றால் அவரால் நிச்சயமாகக் கண்டுபிடிக்கவே இயலாது. முதலில் நோயாளி தனக்கு இருக்கும் உடல் ரீதியான உபாதைகளை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அடுத்து அவற்றைக் கொண்டு ஓரளவு நோயாளியி...