தொலைக்காட்சியா இல்லை தொல்லைக்காட்சியா
காலையில் பெரும்பாலான தினங்களில் நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்து வியர்வை ஆற்ற தொலைக்காட்சி முன் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது மெகா டிவியில் அமுதகானம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும். வேறு வழியின்றி அதைக் காண்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் திரு. ஆதவன் என்பவர். இவர் கிட்டத்தட்ட 6000 எபிசோட் களை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால் அவரது நிகழ்ச்சித் தொகுப்பு எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே நிகழ்ச்சி தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வப்போது காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட வேண்டும்.
சும்மா கை விரல்களால் வித்தை காட்டியும், ஏற்கெனவே போட்டுப் போட்டு கேட்டலுத்துப் போன திரைப்படப் பாடல்களையே வழங்கி வருகிறார். பார்க்கிற நமக்கு வெறுத்துப் போய் விடுகிறது. மொத்தமே ஒரு இருபது முப்பது பாடல்கள்தான். அவற்றையே நிகழ்ச்சியில் வரிசை மாறிப் போடுவது சலிப்பூட்டுகிறது.
ஆதவன் அவர்கள் தன்னுடைய நிகழ்ச்சி நடத்தும் விதத்தை விரைவில் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படிச் செய்யாத பட்சத்தில்மெகா டிவியை மொக்க டிவி என்று பெயர் மாற்றி விடலாம்.
ஆக வேறு எதாவது சேனலைப் பார்க்கலாம் என்றால் அடுத்து வரிசையில் நிற்பது வசந்த் டிவி. இதில் நிகழ்ச்சியின் பெயர் தேனருவி. இதிலும் நிகழ்ச்சி மெகா டிவியைப் போலவே இருக்கும். குறிப்பிட்ட முப்பது நாற்பது திரைப்படப் பாடல்களே மீண்டும் மீண்டும் இடம் பெறும்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளை ஒதுக்கி விட்டு ஜெயா டிவியில் பாட்டுக் கேட்க வந்தால் 9 மணி முதல் 10 மணி வரை ஓரளவு தேவலை என்றுணரலாம்.
எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் அடிக்கடி விளம்பர இடைவேளைகள் வரும். அப்போதெல்லாம் வேளை கெட்ட வேளையில் ஷாருக்கான் ஹார்பிக்கை தூக்கிக் கொண்டு டாய்லெட் கழுவ ஆலோசனை சொல்ல வந்து விடுவார். எல்லாம் நம் தலையெழுத்து.
சரி. செய்திச் சேனல்களுக்குப் போனால் காலையில் போட்ட அதே செய்தியே இரவு வரை ரவுண்டடிக்கும். காணாக்குறைக்கு பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் உப்பு சப்பில்லாத செய்தியைப் போட்டு உயிரை வாங்குவார்கள்.
சரி. இருக்கவோ இருக்கிறது யூ ட்யூப். நல்ல திரைப்படப் பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம் என்று போனால் அங்கும் மாறாத சில திரையிசைப் பாடல்களின் தொகுப்புகள்தான் காணக் கிடைக்கின்றன.
கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கு இரண்டு கொடுமைகள் விலங்கு விலங்கு என்று ஆடிக்கிட்டிருந்ததாம் என்பது போல தொலைக்காட்சி மெகாத் தொடர்கள் கொடுமையில் தனி முத்திரை பதிப்பவை.
தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் தனிரகம். அடுத்தவரின் புருஷனுக்கு ஆசைப்படும் வில்லிகளே முக்கால்வாசி தொடர்களிலும். ஓரிரெண்டடை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்
அப்புறம் கோவிலில் தீ மிதிப்பு, அங்கம் பிரதட்சிணம் , காட்டுக் கருப்பசாமி கோவில், கிராமத்துத் திருவிழா இப்படி எல்லாத் தொடரிலும் காட்சிகள் இருக்கும். இதில் ZEE தொலைக்காட்சித் தொடர்களுக்கு கதைப் பஞ்சமும் கதாபாத்திரங்களுக்குப் பெயர் பஞ்சமும் வேறு உண்டு. எல்லாத் தொடர்களிலும் பல பொதுவான அம்சங்களைக் காண முடியும்.
கடைசியில் சரணடைவது விளையாட்டு சேனல்களில்தான். இப்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, கிரிக்கெட் போட்டிகள் நடப்பது சற்றே ஆறுதல்.
தினமும் உருப்படியாக காணும் நிகழ்ச்சிகள் சங்கரா டிவியில் இந்த சஷ்டிக் கவசம், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவையே.

Comments
Post a Comment