கொரோனாவிலிருந்து மீண்ட பின் வாழ்க்கை.... பகுதி (2)

மூளை

SARS - CoV-2 (Severe Acute Respiratory Syndrome Corona Virus 2)
வைரஸ் மூளையையும் பாதிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள்
உள்ளன. இருநூற்றுப் பதினான்கு கோவிட் -19 நோயாளிகளிடம் ஆய்வு
மேற்கொண்டதில், அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள்
தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அறிவாற்றல் குறைபாடு (cognitive
impairment) உள்ளிட்ட நரம்பியல் அறிகுறிகளை அனுபவித்ததாகத்
தெரிவிக்கிறது. இருப்பினும், அறிகுறிகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது
என்று விஞ்ஞானிகளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விளைவுகள்
வைரஸ் நேரடியாக நியூரான்களைப் பாதிப்பதாலோ, அழற்சி நோயெதிர்ப்பு
காரணமாகவோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையால்
சேதமேற்பட்டதாலோ இருக்கக் கூடும். வடமேற்கு பல்கலைக்கழகத்தின்
(Northwestern University) நரம்பியல் - தொற்று நோய் மற்றும் உலகளாவிய
நரம்பியல் துறையின் தலைவரான (Chief of neuro-infectious disease and
global neurology) டாக்டர். இகோர் கோரால்னிக், எம்.டி (Igor Koralnik)
கூறுகையில், நரம்பியல் பிரச்சினைகளின் மூல காரணம் பற்றி அதிகம்
அறியப்படாத நிலையில், இந்த அறிகுறிகள் தற்காலிகமாகமானவையா
அல்லது நிரந்தரமானவையா என்று நிபுணர்களால் கணிக்க
இயலாது. இத்தகைய நோயாளிகளை நீண்டகாலமாக அதாவது குறைந்தது

ஓராண்டுக்காவது பின்தொடர வேண்டும் ஆனால் உண்மை நிலவரம்
அவ்வாறில்லை. மாற்றங்கள் நிரந்தரமா இல்லையா என்பதற்கான
சாத்தியங்கள் குறித்தும் எங்களுக்கு எதுவுமே இப்போது
தெரியாது. அதனைக் காலம்தான் சொல்லும். காரணத்தைக் கணக்கில்
கொள்ளாத போதிலும் பலருக்கு ஐ.சி.யுவில் தங்கியிருப்பது சில சமயங்களில்
ஐ.சி.யூ மயக்கம் (ICU Delirium) என்றழைக்கப்படும் அறிவாற்றல்
குறைபாட்டுடன் பெரும்பாலும் தொடர்புடையது என்று மருத்துவர்கள்
அறிவார்கள். இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவற்றுக்குக்
காலப்போக்கில் தீர்வு ஏற்பட்டாலும் சில தீர்க்கப் படுவதே இல்லை. 

“மீட்சி” (Recovery) என்பது வயது (Age), முதன்மை மருத்துவ நிலையுடன்
கூடுதலாகச் சேரும் துணை மருத்துவ நிலைகள் (Comorbidities) அதாவது
கோவிட் -19, நோய் முதன்மை மருத்துவ நிலை என்றால் இதய நோய்,
சர்க்கரை நோய் போன்றவை துணை மருத்துவ நிலைகளாகக்
கொள்ளப்படும். அதற்கு முன் அவர்களின் அறிவாற்றல் நிலை, அவர்கள்
புகைப்பிடிப்பவர்களா என்பது போன்ற காரணிகளைப் பொறுத்தது" என்று
கோரல்னிக் கூறுகிறார். நோயாளி வயதானவராக, மிகவும்
பலவீனமானவராக, நோய்வாய்ப்பட்டவராக இருந்து, ஐ.சி.யுவில்
சுவாசப்பாதையில் (Intubated) குழாய் செலுத்தப்பட்டு, நிறைய மருந்துகள்
கொடுக்கப்படும் நேர்வில் பக்க விளைவுகள் ஏற்படலாம். மேற்சொன்ன
வயது உள்ளிட்ட அதே மாறிகள் மற்றும் நோயின் தீவிரம் ஆகியவை

கோவிட் -19 நோயாளிகளின் அறிவாற்றல் மீட்டெடுப்பை பாதிக்கும் என்று
கோரல்னிக் கூறுகிறார்.

நோயெதிர்ப்பு அமைப்பு:

ஒரு நபரின் பிற நோய்த்தொற்றுகளுக்குக்கான ஆபத்தின் மீதான சார்ஸ் –
கோவி – 2 நோயின் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பது கருத்தில் கொள்ள
வேண்டிய மற்றொரு அம்சமாகும். சமீபத்திய ஆய்வில், கோவிட் -19
நோயுடன் கூடவே இன்ஃப்ளூயன்ஸா (influenza), ரைனோவைரஸ்
(rhinovirus), மற்றும் ஆர் எஸ் வி (RSV) எனப்படும் சுவாச ஒத்திசைவு
வைரஸ் (respiratory syncytial virus) உள்ளிட்ட பிற வைரஸ்களிலும்
இருபது விழுக்காடு நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 

பொதுவாக, ஒரு வைரஸின் இருப்பு ஒரு நபரின் மற்றொரு
நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கும். காரணம் நோயெதிர்ப்பு
அமைப்பு ஏற்கனவே உடலில் செயல்படுத்தப்பட்டிருக்கும்.  ஆனால்
சிக்கலின் வேரில் இன்டர்ஃபெரான் (interferon) எனப்படும் ஒரு வகைப்
புரதம் (protein) உள்ளது. இது நோயெதிர்ப்பு அமைப்பின் பதில் மொழியாக
முதல் அலையின் போது வெளியிடப்பட்டு வைரஸின் நகலெடுக்கும் திறனில்
குறுக்கிடுகிறது. இந்தப் புரதம் வைரஸால் தாக்கப்பட்ட உயிரணுவால்
தயாரிக்கப்படுகிறது. மேலும் அதன் வேலை வைரஸை எதிர்த்துப்

போரிட்டுப் பின்னுக்குத் தள்ளுவதாகும். என்ன நடக்கிறது என்றால்,
பாதிக்கப்பட்ட செல் இன்டர்ஃபெரானை உருவாக்கியபோது, ​​அந்த
இன்டர்ஃபெரான் அருகிலுள்ள பாதிக்கப்படாத உயிரணுக்களுக்குள்
நுழைந்து, அந்த உயிரணுவிற்குள் அமர்ந்து கொண்டு பாதுகாவலராக மாறக்
காத்திருக்கும் என்று ஹார்வர்ட் மருத்துவ பேராசிரியர் மந்தீப் மெஹ்ரா,
எம்.டி. (Harvard professor of medicine Mandeep Mehra, MD)
விளக்குகிறார். ஆகவே, இரண்டாவது வைரஸ் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்குள் திரும்பி வரும்போது, ​​அந்த இரண்டாவது தொற்றுநோய்க்கு
ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம். புதிய கொரோனா வைரஸ் (novel
coronavirus) மிகவும் தீங்கு விளைவிக்கக் காரணம் என்னவென்றால், இந்த
இன்டர்ஃபெரான்களை அது அடக்குவது போல் தோன்றுகிறது. அதாவது
கோவிட் -19 தொற்று மோசமானது மட்டுமல்ல, அது எதிர்கால
நோய்த்தொற்றுகளால் கூடுதல் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும். இந்த
வைரஸ் எப்படியோ இன்டர்ஃபெரான் தயாரிப்பதை நிறுத்துவதற்குச்
உயிரணுக்களுக்குக் கற்பிக்கிறது. எனவே இது உண்மையில் சார்ஸ் – கோவி
– 2 வின் இரண்டாவது தொற்றுநோய்களுக்கு அல்லது பிற வைரஸ்களுக்கு
எதிரான நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைக்கச் சாத்தியமாக்குகிறது
என்கிறார் டாக்டர். மெஹ்ரா. இத்தகைய நேர்வில், கோவிட் -19
நோயிலிருந்து மீண்டவர்களுக்கு குளிர்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தாக்கும்
அபாயம் அதிகரிக்கக் கூடும் என்ற கவலை உள்ளது. இன்டர்ஃபெரான்கள்
மீதான கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த ஆராய்ச்சி தொடக்கக்

கட்டத்திலானது என்றாலும், சார்ஸ் (SARS) மற்றும் கோவிட் குடும்பத்தைச்
சேர்ந்த மெர்ஸ் (Middle East respiratory syndrome – MERS - CoV)
ஆகியவையும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இதே போன்ற விளைவைக்
கொண்டிருந்தன. தவிரவும் பல நேர்வுகளில் மெர்ஸ் நோயால்
பாதிக்கப்படுபவர்கள் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் காசநோயாலும்
பாதிக்கப்படுகின்றனர்.

ஒட்டுமொத்த நல்வாழ்வு:

மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டதன் விளைவாக அல்லது வாரக்
கணக்கில் படுத்த படுக்கையாக இருந்ததன் விளைவுகளை உடல் நிலை
மீட்சிக்கு இறுதியாகக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருமித்த கருத்து
என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கு
முன்பிருந்தே ஒருவரின் உடல்நிலை மோசமாக இருந்தால் பாதிப்பு மேலும்
கடுமையானதாக இருக்கும். அவர்கள் தங்கள் வலிமையை மீண்டும் பெற
நீண்ட காலம் பிடிக்கும். அவ்வாறு மீண்டு வரச் சில மாதங்கள் முதல்
ஓராண்டு வரையிலும் கூட ஆகலாம் என்று ரிஸோ கூறுகிறார். உண்மையில்
நீங்கள் நினைப்பது போலவே இந்தக் கால அளவுகள் நபருக்கு நபர்
மாறுபடும். இது சிகிச்சைக்கு முன்னர் அவர்களின் நிலை என்ன
என்பதையும், அவர்களின் பாதிப்பு எவ்வளவு கடுமையானது என்பதையும்
அடிப்படையாகக் கொண்டது. தவிரவும் நோயாளியின் உடல் நிலை, மன
நிலை மற்றும் உணர்ச்சி நிலை ஆகியவற்றை எவ்வாறு கோவிட் 19 நோய்
பாதிக்கிறது என்பதில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.  வைரஸ்
தொற்றால் ஏற்பட்ட உடல் நலக்கேட்டுக்குப் பிந்தைய நாள்பட்ட சோர்வு,
தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி மற்றும் அறிவாற்றல் தெளிவின்மை

ஆகிய உபாதைகள் நீங்கக் காலதாமதம் ஆவதற்கு வைரஸ் சோர்வு
நோய்க்குறியை (Post-viral fatigue syndrome) சாத்தியமானதோர்
விளக்கமாகச் சொல்லலாம்.

கடுமையான நோய்களைத் தொடர்ந்து வரும் உடல் மற்றும் அறிவாற்றல்
குறைபாட்டைக் குறிக்கும் பொதுவான சொற்கள் தீவிர சிகிச்சைக்குப்
பிந்தைய நோய்க்குறி (Post-intensive care syndrome) மற்றும் வைரஸ்
தொற்றுக்குப் பிந்தைய வைரஸ் சோர்வு நோய்க்குறி (post-viral fatigue
syndrome) ஆகியவை. இந்த இரண்டுமே கோவிட் -19 தொடர்புடைய
பிரச்சனைகளே. தீவிர சிகிச்சைக்குப் பிந்தைய நோய்க்குறியோடு தீவிர
சிகிச்சைப் பிரிவில் மயக்க நிலையில் பல நாட்களாகப் படுத்துக் கிடந்ததால்
உண்டாகும் தசை வலுவிழப்பு (muscle atrophy), நினைவாற்றல் மற்றும்
உன்னிப்பாகக் கவனித்தல் (memory and concentration) தொடர்பான
பிரச்சனைகள் மற்றும் உணர்வு ரீதியான அதிர்ச்சிக்குப் பின்னர் ஏற்படும்
மன உளைச்சல் நோய்க்குறி (post-traumatic stress syndrome) ஆகிய
பிரச்சனைகள் கூட ஏற்படலாம். உயிராபத்தான நோயால்
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சில நேரங்களில் மிக மெதுவாகவே
மீட்கப்படுவார்கள். அவர்களின் உடல், உணர்ச்சி மற்றும் அறிவாற்றல்
திறன்கள் திரும்பி வருவது மெதுவாக உள்ளது என்று ரிஸோ
கூறுகிறார். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்த பிறகு
அல்லது செயற்கைச் சுவாசம் நீக்கப்பட்ட பிறகு, சமூக மற்றும் உடல்
ரீதியான மறுவாழ்வுகளை மீட்சியின் ஒரு பகுதியாக அவர்கள் தொடங்க
வேண்டும். 

கோவிட் -19 க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நபர்களில் கூட,
மீட்பு என்பது நீண்ட மிக மெதுவான பயணமாக இருக்கலாம். இது
சர்வைவர் கார்ப்ஸ் குழுவின் உறுப்பினர்களின் அனுபவங்களின் வாயிலாகத்

தெரிய வருகிறது.நோய்க்குறிக்கு என்ன காரணம் என்று மருத்துவர்களுக்குத்
தெரியாத நிலையில் நீடித்த தொற்று, மூளையில் வீக்கம் அல்லது
நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான எதிர்விளைவுகள் ஆகியன
சாத்தியமான மூலங்களாக இருக்கலாம் என்று கருத இடமுண்டு.
உண்மையை சொல்லப் போனால் இத்தகைய நிலைக்குச் சிகிச்சைகள்
எதுவும் இல்லை. அறிகுறிகள் காலப்போக்கில் சில மாதங்களுக்குப் பின்னர்
தீர்க்கப்படும் (resolved). சில நேர்வுகளில் தீர்க்கப்படாமல் நிரந்தரமாகவும்
கூடும்.
புதிய கொரோனா வைரஸின் (Noval corona virus) அறிகுறிகள் மற்றும்
நீண்டகால விளைவுகள் குறித்து இன்னும் அதிகம் அறியப்படாததால்,
அமெரிக்க ஹார்ட் அசோசியேஷனைச் சேர்ந்த டாக்டர்.ஜெசப், நோய்
குறித்த அறிவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாகத் தப்பிப்பிழைப்பவர்கள்
தன்னார்வலர்களாக முன்வருவது அவசியம் என்று கூறுகிறார். மேலும்
டாக்டர்.ஜெசப், " நோயின் நீண்ட கால விளைவுகளைப் பற்றி அறிந்து
கொள்ள எங்களுக்கு அதிகம் தேவை இருக்கும். இப்போது,
​​மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் அதிகம்
கொடுக்கப்படுகிறது, ஆனால் மருத்துவமனைக்கு வெளியே என்ன
நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே முக்கியமானது. செயல்வீரனாகத்
திகழவதென்பதே ஒரு அறிவியல் ஆய்வுக்கு முழுமனதோடு தாமாக
முன்வருவதுதான். ஆரம்பகால தடுப்பூசிகளைச் சோதனை செய்ய
தன்னார்வத் தொண்டு செய்யும் செயல் வீரர்கள் எங்களிடம் ஏற்கனவே
உள்ளனர். ஆனால் இன்னும் பல ஆண்டுகள் தொடரப்போகும் ஒரு
விஞ்ஞான ஆய்வின் ஒரு பகுதியாக நான் இருப்பேன் அல்லது பதிவேட்டில்
ஒரு பகுதியாக நான் இருப்பேன் என்று சொல்லவே இப்போது நிறைய
வீரர்கள் எங்களுக்குத் தேவைப்படுகிறார்கள்” என்று கூறுகிறார். 

கொரோனா விழிப்புணர்வு குறித்த இக் கட்டுரையின் மூலம்:
 எலிமெண்டல் 19 மே 2020 செய்தி ஏட்டில் டானா ஜி ஸ்மித் (Dana G Smith) எழுதியது.
https://elemental.medium.com/the-long-term-health-impacts-of-being-infected-with-the-
coronavirus






நவம்பர் 2020 ஹெல்த் கேர் மருத்துவ மாத இதழில் கட்டுரையின் இப்பகுதி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)