ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (1)

ரிஷப ராசி இரவு வானத்தில் மிகப்பெரிய விண்மீன் கூட்டங்களில் ஒன்றாகும். கற்காலத்து மனிதன் இந்த உடுக் கூட்டத்தை பத்தாயிரம் (10,000) ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு காளையாக (Bull) அடையாளம் கண்டிருப்பதைக் குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடத்தில் குகை ஓவியங்களைப் பற்றிச் சொல்வது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.


இன்றைக்குக் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் மத்திய பிரான்சில் (central France) லாஸ்காக்ஸில் (Lascoux) பதினெட்டு வயதான மார்செல் ரவிடாட் (Marcel Ravidat) ஜாக்ஸ் மார்சல் (Jacques Marsal), ஜார்ஜஸ் அக்னெல் (Georges Agnel) மற்றும் சைமன் கோன்காஸ் (Simon Coencas) ஆகிய நான்கு பதின்ம வயது இளைஞர்கள் சேர்ந்து பழைமையானதோர் குகையை எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு எப்போதோ பெரிய பைன் மரம் ஒன்று விழுந்த இடத்தில், தரையில் ஒரு பெரிய துவாரம் உருவாகியிருந்தது. மார்செல் ரவிடாட்டின் நாய் ரோபோ (Robot) எதிர்பாராத விதமாகத் துவாரத்துக்குள் விழுந்து விட்டது. மார்செல் ரவிடாட் துவாரத்தின் உள்ளே ஆழத்தில் விழுந்து விட்ட நாயை மீட்கத் தன் மற்ற மூன்று நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்தவர் குகையின் நுழைவாயிலைக் கண்டுபிடித்தார். 15 மீட்டர் (49 அடி) ஆழமான சுரங்க வாயிலின் நடைகுழி (Shaft) வழியாக அவர்கள் குகைக்குள் நுழைந்தனர், இது அருகிலுள்ள லாஸ்காக்ஸ் மேனருக்கு (Lascaux Manor) ஒரு ரகசியப் பாதை என்று அவர்கள் நம்பினர்.  விலங்குகளின் சித்தரிப்புகளால் குகையின் சுவர்கள் நிரப்பப்பட்டிருப்பதை இந்த மூன்று இளைஞர்களும் கண்டுபிடித்தனர்.





Picture courtesy: https://en.wikipedia.org/wiki/Lascaux 
படம் : லாஸ்காக்ஸ் குகையின் தற்போதைய தோற்றம்.



தொடர்ச்சி, சூழல் அல்லது வெறுமனே ஒரு குகை ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்கள் இந்தக் குகைக் கலைக்கூடங்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் காளைகளின் கூடம் (Hall of the Bulls), வழிப்பாதை (Passageway), வாயிற்குழி (Shaft), நடுக்கூடம் (Nave), கவியம் (Apse) மற்றும் பூனையறை (Chamber of Felines) ஆகியவை அடங்கும். அவர்கள் மீண்டும் செப்டம்பர் 21, 1940 அன்று அபே ஹென்றி ப்ரூயிலுடன் (Abbé Henri Breuil) திரும்பினர். ப்ரூயில் குகை ஓவியங்களின் பல திட்டவரைகளை (sketches) உருவாக்கியுள்ளார்.  சில ஓவியங்கள் மிகவும் சீரழிவுற்றிருப்பதன் காரணமாக இன்றும் ப்ரூயிலின் திட்டவரைகளே ஆய்வுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 லாஸ்காக்ஸில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெளித் தெரியாமல் இருந்த உலகின் மிகத் தொன்மையான கலைப் புதையல் ஒன்றின் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி விரைவாகப் பிரான்ஸ் நாடெங்கும் பரவியது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த தளத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

லாஸ்காக்ஸ் குகைச் சுவர்களில் காணப்படும் சித்தரிப்புகள் அப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு "பழங்கற்காலத்துக்கு முந்தைய "( upper paleolithic) கலாச்சார மக்களால் வரையப்பட்டவை . மேலும் கி.மு. 17,500 முதல் கிமு 9,000 வரையிலான காலகட்டத்தில் அந்தக் குகையின் சுவர்கள்  இந்தச் சித்திரங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று  வரலாற்று புத்தகங்கள் உறுதியாகக் கூறினாலும், உண்மையில்  அவற்றை உருவாக்கியவர் யார், அந்தச் சித்திரங்கள் எதை  குறிக்கின்றன என்பதெல்லாம் தெரியவில்லை.

லாஸ்காக்ஸ் மற்றும் அருகிலுள்ள பிற தளங்களில் காணப்படும் படங்கள் பெரும்பாலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்து ஐரோப்பிய விலங்குகளைக் குறித்தே உள்ளன. அந்த காலகட்டத்தில் காட்டெருது (Auroch) மற்றும் சிவப்பு மான்(Red Deer) மற்றும் பிற பாலூட்டிகளை பழங்கற்கால மனிதர்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம். இவற்றுடன் கூடவே மனித உருவங்களைக் கொண்ட சில காட்சிப் படங்களும் காணப்படுகின்றன என்றாலும் லாஸ்காக்ஸில் மனித உருவம் கொண்ட  காட்சி ஒன்றே ஒன்று மட்டும் காணப்படுகிறது.


பொதுவாக இத்தகைய படங்கள் மனிதனின் வேட்டையாடிய வீர தீரக்கதைகளின் வெவ்வேறு அத்தியாயங்களாகவே கொள்ளப்படுகிறது.  வேட்டையாட்டும் போது சில விலங்குகள் கொல்லப்பட்டிருக்கும், சில வேட்டைக்காரர்கள் காயமடைந்திருக்கலாம் அல்லது அவர்கள் மடிந்திருக்கலாம். இவற்றையே இந்த ஓவியங்கள் குறிப்பிடுவதாக விளக்கம் சொல்லப்படும் நிலையில் வேறு சில அறிஞர்கள் ஓவியங்கள் வெறும் வேட்டையாடுதலின் விவரிப்புகள் என்ற கருத்துக்கு அப்பால் சென்று, அவை வலிமையான காளைகள் மற்றும் குதிரைகள் மற்றும் கலைமான்களில் வெளிப்படும் இயற்கைச் சக்தியின் ஆழமான மற்றும் விசித்திரமான அடையாளத்தின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றன என்று வாதிடுகின்றனர்.

லாஸ்காக்ஸின் புகழ்பெற்ற குகைகளின் சுவர்களில் வர்ணம் பூசப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய (prehistoric) இரவு வானத்தின் வரைபடம் (Map of Night Sky) ஓவியங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 16,500 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் இந்த வரைபடம், இன்று கோடை முக்கோணம் (Summer Triangle) என அழைக்கப்படும் மூன்று பிரகாசமான உடுக்களைக் சுட்டுகிறது என்று சொல்லப்படுகிறது. லாஸ்காக்ஸ் ஓவியங்களில் கார்த்திகை உடுக் கொத்தின் (Pleiades star cluster) வரைபடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


14,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட உடுக்களின் மற்றொரு அமைப்பு (pattern of stars) ஸ்பெயினில் நாட்டில் உள்ள மற்றொரு குகையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வரைபடங்கள் நம் முன்னோர்கள், நம்மில் பலர் நம்புவதை காட்டிலும் அதி நவீனமானவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றன என்று மியூனிச் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் மைக்கேல் ராப்பெங்லூக் (Dr. Michael Rappenglueck) குறிப்பிடுகிறார்.


லாஸ்காக்ஸ் குகைகளில் காளைகள், குதிரைகள் மற்றும் கலைமான் போன்ற கண்கவர் வரைபடங்கள் 16,500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை.
1940 இல் கண்டுபிடிக்கப்பட்ட இச் சுவர்களில் காணப்படும் வரைபடங்கள் நமது தொலைதூரத்து மூதாதையர்களின் கலைத் திறமைகளைக் காட்டுவது மட்டுமல்லாமல் அவர்களின் அறிவியல் அறிவையும் காட்டக்கூடும்.




படம் : காளை, மனிதன் மற்றும் குச்சியின் மேல் ஒரு பறவை  
Picture courtesy: https://en.wikipedia.org/wiki/Lascaux


உடுக்களை முதலில் பட்டியலிடத் துவங்கிய மனிதகுலத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் கோளரங்கமாக இந்தக் குகைகள் இருந்திருக்கலாம். லாஸ்காக்ஸ் குகைகளில் “இறந்த மனிதனின் நடைவழி” (Shaft of the Dead Man) என அழைக்கப்படும் ஒரு பகுதியில் வான வரைபடம் (Sky map) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடைவழிச் சுவரில் வர்ணம் பூசப்பட்டு அதில் காளை, மனிதன் மற்றும் குச்சியின் மேல் ஒரு பறவை  ஆகியன வரையப்பட்டுள்ளன. இது பண்டைய உடுக்கள் வரைபடம் என்று கருதப்படுகிறது. ஒரு காளை, மனிதன் மற்றும் குச்சியின் மேல் ஒரு பறவை  ஆகியன கோடைகால முக்கோணம் என்று பிரபலமாக அறியப்படுகின்ற வானியல் காட்சியை (asterism)  வேகா (Vega), டெனெப் (Deneb) மற்றும் ஆல்டேர்(altair) ஆகிய மூன்று முக்கிய நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. மேலும் அவை வடக்கு வான் அரைக்கோளத்தின் கோடை காலத்தின் நடுமாதங்களில் தலைக்கு மேலாக கட்புலனாகும் பொலிவான வான் பொருட்களில்  பொறுக்கி எடுத்து அடையாளம் காணக் கூடியவை . இந்த உருக்கோடுகள் (outlines) காளையின் கண்கள், பறவைமனிதன் மற்றும் பறவை ஆகியன சேர்ந்து வானத்தின் வரைபடத்தை உருவாக்குகின்றன.



 Picture courtesy : http://rockartblog.blogspot.com/2018/08/are-lascaux-cave-paintings-encoded.html

சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன்பு, வானத்தின் இந்த பகுதி ஒருபோதும் அடிவானத்திற்கு (Horizon) கீழே அமைந்திருக்க வாய்ப்பில்லை. வானத்தின் இப்பகுதி  வசந்த காலத்தின் தொடக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும். "இது வரலாற்றுக்கு முந்தைய பழைய கற்கால மனிதர்களின் அண்டத்தின் வரைபடம். அவர்களின் வானம், விலங்குகள் மற்றும் ஆவி வழிகாட்டிகளால் நிறைந்தது” என்று டாக்டர் ராப்பெங்லூக் குறிப்பிடுகிறார்.

வரலாற்றுக்கு முந்தைய பழைய கற்கால மனிதன் இரவு வானத்தில் மிகுந்த அக்கறை காட்டினான் என்பதற்கான ஆதாரம் வான வரைபடம் மட்டுமே இல்லை. லாஸ்காக்ஸ் குகை வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு காளையின் அற்புதமான ஓவியம் உள்ளது. அதன் தோள்பட்டையில் தொங்குவது கார்த்திகை உடுக்களின் கொத்து (Pleiades star cluster) வரைபடமாகத் தோன்றுகிறது. இவை  சில நேரங்களில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறது.

காளை ஓவியத்தின் உள்ளே காணப்படும் புள்ளிகள், வானத்தின் அந்த பகுதியில் காணப்படும் பிற உடுக்களைக் குறிப்பவையாக இருக்கக் கூடும்.
இன்று, இந்தப் பகுதி ரிஷப ராசி விண்மீன் தொகுதியின்(Taurus constellation) ஒரு பகுதியாக அமைகிறது, இது வானத்தின் இந்த பகுதியை மனிதகுலம் அடையாளம் காண்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

குகை வளாகம் 14 ஜூலை 1948 இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. ஆரம்பகட்ட தொல்பொருள் விசாரணைகள் ஒரு வருடம் கழித்து, நடைவழியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டன. 1955 வாக்கில், ஒரு நாளைக்கு 1,200 பார்வையாளர்கள் என்ற கணக்கில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, வெப்பம், ஈரப்பதம் மற்றும் பிற அசுத்தங்களால் கண்ணுக்குத் தெரிந்தே ஓவியங்கள் மிகவும் சேதமடைந்தன. காற்று நிலை மோசமடைந்ததால், பூஞ்சை மற்றும் பாசி ஆகியவை சுவர்களில் பெருகத் தொடங்கின. இதன் விளைவாக, 1963 ஆம் ஆண்டில் குகை பொதுமக்களுக்கு மூடப்பட்டது. ஓவியங்கள் அவற்றின் அசல் நிலைக்கு மீட்டமைக்கப்பட்டன, தவிரவும் அவற்றைத்  தினசரி அடிப்படையில் கண்காணிக்க அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சந்திப்போம்.

Comments

  1. நல்ல விரிவான தகவலாக உள்ளது. பண்டைய மனிதர்களின் வானவியல் அறிவும் ஆர்வமும் இதன்மூலம் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றி முத்துக்குமார்.‌ தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். உங்கள் ஆதரவே என்னை உற்சாகப்படுத்தும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)