கண்டதும் களித்ததும் - பகுதி - 6 (புனே பயணக் கட்டுரைகள்) - சனிவார்வாடா


இதுவரையில் அஷ்டவினாயகர் ஆலயங்கள் பயணம் குறித்து எழுதி வந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை (05.06.2019) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல நானும் என் மனைவியும் கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. வீட்டை விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார். பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது. கடவுள் எங்களைக் கை விடவில்லை.


அந்த மனிதர் பெயர் யூசுப்கான். அவரது பண்பும் பழகும் விதமும் பணிவும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பயணங்கள் வெற்றிகரமாக அமைவது ஓட்டுநரைப் பொறுத்ததே என்பது என் அனுபவம். முதலில் சனிவார்வாடா(Shaniwar wada)க்கும் அடுத்து ஷிண்டே சத்ரிக்கும்(Shinde Chaatri) அழைத்துச் சென்றார். பொறுமையாகக் காத்திருந்து முகம் கோணாமல் சொன்ன இடங்களுக்கு மறுக்காமல் (மீட்டர் கட்டணத்தில்)  கூட்டிச் சென்றார். எல்லாவற்றுக்கும் மேல் மிகவும் நட்பாகப் பழகினார். மறு தினம் ரம்ஜானுக்கு தன் வீட்டிற்கும் வர அழைப்பு விடுத்தார். அடுத்து புதன் கிழமை (07.06.2019) அன்று காலையில் பார்வதி ஹில்ஸ்(Parvathi hills), சரஸ்பாக் (Sarasbaug vinayagar temple) வினாயகர் கோவில், பாதாளேஷ்வர் கோவில் (Pataleshwar cave temple), ஸத்துர்ஷிரிங்கி(Chatur Shringi temple) ஆலயம் மற்றும் ஜங்கிலி மகராஜ் சமாதி(Jangli Maharaj Samadhi) ஆகிய இடங்களுக்கும் மாலையில் தக்டு ஷெத்(Dagadusheth vinyagar temple) வினாயகர் ஆலயத்திற்கும் கூட்டிச் சென்றார்.


மறுபடி வரும் செவ்வாய் அன்று விடுபட்ட இடங்களுக்கும் அழைத்துச் செல்ல  வருவதாகச் சொல்லியுள்ளார். இனி எப்போதும் புனே வரும் முன்னர் வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புங்கள், நானே உங்களை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து எல்லா இடங்களுக்கும் இட்டுச் செல்கிறேன் என்று தன் தொலைபேசி எண்ணையும் தந்துள்ளார். நான் பார்த்தவரையில் புனேயில் ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் அடாவடியாகப் பேசுவதில்லை. முக்கியமாக மீட்டர் போட்டுத்தான் காசு வாங்குகிறார்கள். சூடு மீட்டர் ஆட்டோக்கள் எதுவுமே கண்ணில் படவில்லை. இதுவரை புனே ரயில் நிலையத்திலிருந்து ஐந்தாறு முறை வீட்டுக்குப் போய் வந்துள்ளேன். பெரும்பாலும்  மிகச் சரியாக தொண்ணூற்று ஆறு ரூபாயே மீட்டர் கட்டணமாக வந்தது.


இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம்.




சனிவார்வாடா, மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக் கோட்டை, மூன்றாவது ஆங்கிலோமராத்தா போரில் பேஷ்வாக்கள் ஆங்கிலேயர்களிடம் தோல்வி கண்டு ஆட்சியை இழக்கும் வரை மராத்தியப் பேரரசில் பேஷ்வாக்களின் ஆட்சி பீடமாக 1818 ஆம் ஆண்டு வரையில் திகழ்ந்து வந்தது. மராத்தியப் பேரரசின் உதயத்திற்குப் பின் இந்த அரண்மணை இந்திய அரசியலின் மையப்புள்ளியாக பதினெட்டாம் நூற்றாண்டில் விளங்கியது. இக் கோட்டை 1828 ஆம் ஆண்டில் காரணம் தெரியாத தீ விபத்து காரணமாகப் பெருமளவு சேதமடைந்து அழிந்து பட்டது. இருப்பினும் எஞ்சியுள்ள பகுதிகள் தற்போது சுற்றுலாத் தலமாக இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எப்படியானாலும் சனிவார்வாடா கட்டப்பட்டதிலிருந்து  அழிவைச் சந்தித்த வரையான எழுபது ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மிகவும் சுவாரசியமானவை. அவை அரச குடும்பங்களில் ஆட்சித்தலைமைக்காகத் தங்களால் நேசிக்கப்பட்டவர்களைக் கூடத் தயக்கமின்றிக் கொல்லத் துணிந்தனர் என்பதையே காட்டுகிறது. சனிவார்வாடாவின் சரித்திரமும் ஏன் இந்தியா பிரிட்டிஷாரின் கைக்குள் வந்தது என்பதையும் பிரிட்டிஷாருக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏன் அந்நியப் படைகள் நம் நாட்டைப் பலமுறை ஊடுறுவல் செய்தன என்னும் வினாவிற்கும் பதில் அளிப்பதாகவே உள்ளது. சனிவார்வாடா கட்டப்பட்ட காலத்தில் மராத்தியப் பேரரசு உச்சத்தில் இருந்தது. அவுரங்கசீப் இறப்பிற்குப் பின்னர் முகலாயர்கள் ஆட்சி அதிகாரத்திற்கான போட்டியில் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இது மராத்தியர்களுக்குப் பரந்த மராத்தியப் பேரரசை  நிறுவ நல்லதோர் சந்தர்ப்பமாக அமைந்தது. அதனைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட  இந்தியா முழுவதையும் ஒரு குடைகீழ் அமைத்த போதும் அதிக நாள் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை. சிற்றரசர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழிப்பதில் காலம் கழித்தனர். மேலும் பெயரளவில் மராத்தியப் பேரரசு சத்ரபதிகள் தலைமையில் செயல்பட்டாலும், மராத்தியப் பேரரசின் மெய்யான கட்டுப்பாட்டைச் சத்ரபதிகளின் பிரதம மந்திரிகளான பேஷ்வாக்கள் தங்களது கையிலேயே வைத்திருந்தனர்.  

உண்மையில் சொல்லப்போனால் சனிவார் வாடா மராத்தியப் பேரரசின் பேஷ்வாக்களின் ஏழு அடுக்கு தலைமைச் செயலக மாளிகையாகவே இருந்துள்ளது. ஆரம்பத்தில் மொத்த மாளிகையுமே கருங்கல்லால் கட்டி முடிக்கவே திட்டமிடப்பட்டிருந்தது. அடித்தளமும் முதலடுக்கும் கருங்கல்லால் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மராத்தியப் பேரரசின் தலைநகரான சதாராவின் குடிமக்கள் மகராஜா ஷாகு விடம் கருங்கல் மாளிகையைக் கட்ட அனுமதிப்பதும் கட்டுமானம் செய்வதும் மன்னருக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட உரிமை. ஆகவே பேஷ்வாக்கள் கருங்கல் மாளிகை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஷாகு மகராஜா பேஷ்வாக்களுக்கு அனுப்பிய அரசுக் கடிதத்தில் மீதமுள்ள ஆறு அடுக்குகளும் கருங்கல்லைப் பயன்படுத்தாமல் செங்கலால் மட்டுமே கட்டப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.




சத்ரபதி ஷாகுவின் பிரதம மந்திரியாக இருந்த பேஷ்வா பாஜி ராவ் – I, தன் வசிப்பிடமான சனிவார் வாடாவுக்கான அடிக்கல்லை 1730 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் நாளன்று நாட்டியதாகத் தெரிகிறது. சனிவார் என்றால் சனிக்கிழமை என்றும் வாடா என்பது பொதுவாகக் குடியிருப்புப் பகுதி என்றும் பொருள்படும். புனே நகரின் பல பகுதிகள் வார நாட்களின் பெயரால் ரவிவார் பேட் சோமவார் பேட், மங்கள்வார் பேட் புதவார் பேட், குருவார் பேட், சுக்ரவார்பேட், சனிவார்பேட் , என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. கட்டிடத்திற்கான கருங்கற்கள் அருகில் உள்ள சின்ச்வாட்டின் சுரங்கங்களில் இருந்தும்,ஜூனார் காட்டுப்பகுதிலிருந்து தேக்கு மரங்களும், சுண்ணாம்பு ஜெஜுரிப் பகுதியிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. சனிவார்வாடா 1732 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான கட்டுமானச் செலவு அக்காலத்தில் ரூபாய் 16,120 செலவானது. இது அக்காலத்தில் மிகப் பெரிய தொகை.

 1732 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை, நல்ல நாளாகத் தேர்வு செய்யப்பட்டுப் புதுமனை புகுவிழா இந்துமதச் சம்பிரதாயங்களின்படி கோலாகலமாக நடந்தேறியது. பிற்காலத்தில் பேஷ்வாக்கள் மதில் சுவர்களைக் கொத்தளங்கள் மற்றும் வாயில்களுடனும் பலப்படுத்தி, நீரூற்றுகளையும் நீர்த்தேக்கங்களையும் உருவாக்கினர். தற்சமயம் சுற்றுப்புற மதில் சுவற்றில் ஐந்து வாயில்களும் ஒன்பது கொத்தளக் கோபுரங்களும் உள்ளன. கோட்டைக்குள் புராதனக் கட்டிடத்தின் அடிதளங்களையும், பூங்காவையும் காணலாம். இக்கோட்டை புனே நகரின் கஸ்பா பேட் பகுதியில் மூல-முத்தா நதிக்கருகில் அமைந்துள்ளது.     
பின்னர் சனிவார் வாடாவின் மற்றஆறு அடுக்குகளும் கருங்கல்லைப் பயன்படுத்தாமல் செங்கலால் மட்டுமே அரசாணைப்படிக் கட்டி முடிக்கப்பட்டது. 1758 ஆம் ஆண்டு வாக்கில் இந்தக் கோட்டையில் ஆயிரம் பேர் வசித்திருக்கிறார்கள். பின்னர் தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் படையின் பீரங்கித் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் செங்கலால் எழுப்பப்பட்ட ஆறு அடுக்குகளும் சிதைந்து போய் விட கருங்கல்லால் கட்டப்பட்ட அடித்தளம் மட்டுமே பழைய புனே நகர்ப்பகுதிகளில் சனிவார்வாடாவின் எச்சங்களாகக் காணக் கிடைக்கிறது.

ஜூன் 1818 ஆம் ஆண்டில் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு பேஷ்வா பாஜிராவ் – II, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சர். ஜான் மால்கமிடம் தோல்வியுற்றுத் தன் அரியணையைக் கைவிட்டு சென்றார். பின்னர் அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூருக்கு அருகிலுள்ள பித்தூருக்கு அரசியல் கைதியாக நாடு கடத்தப்பட்டார்.
1828 ஆம் ஆண்டு மிகப் பெரிய தீ விபத்து சனிவார்வாடா மாளிகைகுள் ஏற்பட்டது. ஏழு நாட்களுக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. கனத்த கருங்கல் மதில் சுவர்களும், உறுதியும் கனமும் கொண்ட  தேக்கு மரத்தாலான வாயிற்கதவுகளும், ஆழமான அடித்தளங்களும் மட்டுமே தீ விபத்திலிருந்து தப்பிக்க கட்டிட இடிபாடுகள் மட்டுமே கோட்டைக்குள் மிஞ்சியிருந்தன.
பகவான் ஸ்வாமி நாராயண் சரிதைக் குறிப்பான ஹரிசரித்ரஅம்ருதசாகரில், தான் பாஜிராவ் –II வின் வற்புறுத்தலின் காரணமாக 1799 இல் சனிவார்வாடாவுக்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.  சனி வார் வாடாவின் வாயில்களில் முதன்மையானது டில்லி தர்வாஜா (Dilli Darwaja ) இது வடக்கே டில்லியை நோக்கியுள்ளது. வடக்குப் பார்த்த கோட்டைவாயில் பாஜிராவின் இலக்கான முகலாய எதிர்ப்பைக் குறிப்பதாகச் சத்ரபதி ஷாகு கருதியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் கோட்டை மண்ணால் கட்டப்படாமல் மராத்திய வீரர்களின் வீரமிக்க மார்புகளால் கட்டப்படட்டும் என்றாராம்.வலிமையான டில்லி நுழைவாயில் கதவுகள் அம்பாரியுடன் கூடிய யானைகள் நுழையும் அளவிற்க்குப் பெரியவை, உயரமானவை. யானைகள் மோதி உடைப்பதைத் தடுக்க ஒவ்வொரு கதவிலும் ஒரு அடி நீளம் கொண்ட எழுபத்திரண்டு இரும்புக்  ஆணிகள் வரிசைக்கு எட்டு என்று ஒன்பது வரிசைகளாக  போர் யானைகளின்  நெற்றிப் பகுதி அமையும் சராசரி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதவும் இரும்புச் சட்டங்களால் பலப்படுத்தப்பட்டு, சட்டங்கள் கனத்த இரும்பாலான புரியாணிகள் கொண்டு முனைகளில் கூரான கூம்பு வடிவத் தலைகளால் முடுக்கப்பட்டு உள்ளன. வலது கதவில் ஓராள் நுழையும் அளவில் சாதரணமாக வெளிச் செல்லவும் உள்நுழைவுக்கும்  திட்டிவாசலும் கதவும் உள்ளது. கொத்தளத்தின் பக்கவாட்டில் அம்பு எய்வதற்கான துவாரங்களும், கோட்டைச் சுவரை மீறிக் கடக்க முயலும் எதிரிப்படையினர் மீது கொதிக்கும் எண்ணைய்யை ஊற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. சனிவார்வாடா கோட்டையை குமவாட் ஷத்ரியர்கள்('Kumawat Kshatriya) என்ற கும்ஹார்(Kumhar) உட்பிரிவினர் கட்டினர் என்றும் , கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு நாயக்(Naik) என்று பேஷ்வாக்களால் பட்டம் தரப்பட்டது.

ஒருவேளை முதன்மை வாயில் கதவுகள் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டாலும் உட்புகும் படை நேராக கோட்டைக்குள் செல்ல முடியாது. உள் நுழைந்ததும் முதலில் வலது பக்கம் திரும்பி பின்னர் இடதுபுறம் திரும்பியே நுழைய முடியும். இத்தகைய அமைப்பு கோட்டையைக் காக்கும் படை, உள் நுழையும் படை மீது தங்கள் தாக்குதலை தொடர மேலும் ஒரு வாய்ப்பை நல்குகிறது. இதனால் வாயிலை மீண்டும் கைப்பற்றவோ அல்லது உள்வரும் எதிரிப்படையைத் தாமதப்படுத்தவோ முடியும். தகுந்த இந்துமதச் சம்பிரதாயங்களுடன் போருக்கான இராணுவ அணிவகுப்புச் சடங்குகளும் திரும்ப வந்து சேரும் போதான வரவேற்புச் சடங்குகளும் கோட்டையின் இந்த வாயிலிருந்தே ஆரம்பமாகும்.

தற்போது இவ்வாயில் வழியாகவே சுற்றுலாப் பயணிகள், இந்தியத் தொல் பொருள் துறையால்  உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாப் பயணிகளிடம் இந்தியரானல் 25 ரூபாயும், வெளிநாட்டவரானால் முன்னூறு ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில்களில் தருவது போல் பிளாஸ்டிக் வில்லை தரப்படுகிறது. அந்த வில்லையைப் பயன்படுத்தியே உள்ளே நுழையவும், வெளியேறவும் முடியும்.
வடக்குப் பார்த்த மஸ்தானி தர்வஜா (Mastani Darwaja) அல்லது அலிபகதூர் தர்வஜா வாயில் பாஜிராவ் – I இன் மனைவியான மஸ்தானி கோட்டையை விட்டு வெளியே பயணிக்கும் போது பயன்படுத்தும் வாயிலாகும்.பாஜி ராவ் மஸ்தானி என்ற திரைப்படம் இவரைப் பற்றிய திரைப்படமே.
அடுத்த வாயில் கிழக்குப் பார்த்த கிட்கி (Khidki Darwaja ) தர்வாஜா. கவசம் பொருத்திய சாரளங்கள் கொண்ட வாயில் இது.

கணேஷ் தர்வாஜா (Ganesh Darwaja). இது தென்கிழக்குப் பார்த்த வாயில். இவ்வாயில் அருகில் கஸ்பா கணபதி ஆலயத்திற்கு அரச குடும்பப் பெண்மணிகள் சென்று வர பயன்பட்டது  


பேஷ்வா பாஜிராவ் – I க்கு நானாசாகேப் மற்றும் ரகுநாத் ராவ் என்று இரண்டு மகன்கள்.இதில் நானாசாகேப் மூத்தவர் என்பதால் பாஜிராவின் மரணத்துக்குப் பின் பேஷ்வா ஆக ஆனார். நானா சாகேப்பிற்கு மூன்று ஆண் வாரிசுகள். மூத்தவர் விஸ்வாஸ் ராவ்1761 ஆம் ஆண்டு நடந்த மூன்றாம் பானிப்பட்டுப் போரில் வீரமரணம் அடைந்தார். எனவே நானாசாகேப்பின் இறப்பிற்குப் பின்னர் இரண்டாவது மகன் மாதவ ராவ் பேஷ்வா ஆனார். பட்டத்துக்கு வந்த மாதவராவ் வயதில் மிகச் சிறியவர் என்பதால் சித்தப்பாவான ரகுநாதராவ், மாதவராவின் சார்பில் ஆட்சிப் பொறுப்பை (regent) ஏற்றுச் செயல்பட்டார். ஆனால் ரகுநாத ராவுக்குக்கோ மனதில் பேஷ்வாக ஆகும் திட்டம். விரைவிலேயே பேஷ்வா மாதவராவுக்கு எதிராக ஹைத்ராபாத் நிசாமுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்தார். இந்தக் கூட்டுச்சதி கொடெகானில் (Khodegaon) முறியடிக்கப்பட்டு, ரகுநாத ராவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1772 இல் மாதவராவ் இறப்புக்குப் பின் வீட்டுக் காவலில் இருந்த ரகுநாத ராவ் விடுதலை செய்யப்பட்டார்.

மாதவராவின் இறப்பிற்குப் பின்னர் நானா சாகேபின் கடைசி மகன் நாராயணராவ் ஐந்தாவது பேஷ்வாவாக ஆட்சிக் கட்டில் ஏறினார். மாதவராவ் மரணமடையும் போது நாராயணராவுக்கு பதினேழு வயதே ஆகி இருந்தது. மிகச் சிறிய வயதில் அரியணை ஏறிய பேஷ்வா இவர்தான்.  நாராயணராவ் பேஷ்வா ஆனதை நானா சாகேபின் சகோதரர் ரகுநாதராவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நானா சாகேப்பிற்குப் பின்னர் தான் பேஷ்வாக விரும்பிய ரகுநாத ராவ், நானாசாகேப்பின் இரண்டாவது மகன் மாதவராவ் பேஷ்வா ஆனதையே விரும்பவில்லை. சிறுவன் நாராயணராவ் 1772 இல் பேஷ்வாவாக அறிவிக்கப்பட்டதும் அவரது அதிகார வேட்கை கொண்ட மனது, அவர் பேஷ்வாவாக வர மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதை உணர்த்தியது. இருப்பினும் நாரயணராவும், ரகுநாதராவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றே முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரகுநாதராவ், சிறுவன் நாராயண ராவின் சார்பாக அதிகாரம் செலுத்தினார். பழைய வழக்கங்கள் எளிதில் மாறுவதில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று தமிழில் சொல்வார்கள். சித்தப்பா ரகுநாதராவ் பழையபடி நாராயணராவுக்கு எதிரான தனது சதி வலையை விரிக்க ஆரம்பித்தார். அதே சமயம் நாராயணராவுக்கும் தன் சித்தப்பா ரகுநாத ராவைக் கட்டோடு பிடிக்கவில்லை. தனது மூத்த சகோதரன் மாதவராவின் மீது நடந்த  கொலை முயற்சிகளுக்கு ரகுநாதராவே காரணம் என்று முழுமையாக நம்பினார்.  நராயணராவின் பிடிவாதம், முதிர்ச்சியற்ற பேச்சு மற்றும் உணர்ச்சி வேகத்தில் செயல்படும் குணமும் இருவருக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக கருத்து வேறுபாடுகளை வளர்த்தன. இரண்டு புறமும் தூபம் போட நிறையப்பேர்களும் இருந்தனர். அனுதினமும் பரஸ்பர வெறுப்பு மிக வேகமாக அதிகரித்தது. விரோதம் வளர்ந்து கருத்து வேறுபாடுகள் ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தது. தனக்கு  எதிரான சதி முயற்சியை அறிந்து கொண்ட இளம் பேஷ்வா நாராயணராவ், சித்தப்பா ரகுநாத ராவை வீட்டுக் காவலில் வைக்க ஆணையிட்டார். இதுவே அவர் கொலை செய்யப்படக் காரணமாக அமைந்தது. ரகுநாத ராவின் மனைவி ஆனந்திபாய்க்கு இச் செயல் கடும் ஆத்திரமூட்டியது. அவர் இதற்காக கார்டிஸ்களின் (Gardis) உதவியை நாடினார். மத்திய இந்தியாவில் உள்ள ஒரு வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்ட பில் (Bhil or Bheel) பழங்குடி இனத்தின் ஒரு பிரிவான கார்டிஸ்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட கொலைசெய்யும் கூலிப்படையினர். 1773 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30, வினாயகர் சதுர்த்தியின் கடைசி நாள்.  ,  அவர்களின் தலைவன் சுமர் சிங் கார்டியும் (Sumar Singh Gardi) அவனது கார்டிப் படையினரும் கோட்டைக்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கத் துவங்கினர். அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி மெல்ல பேஷ்வாவின் படுக்கை அறைக்குச் செல்லும் வழியில் பேஷ்வாவின் அலுவலர் ஒருவரைக் கொன்று விட்டு மெல்ல நகரத் துவங்கினர். கார்டிஸ்களைக் கண்ணுற்றதும் ஆபத்தை உணர்ந்து கொண்ட பேஷ்வா தன் அறையை விட்டு தன் சித்தப்பா ரகுநாதராவ்  வசிக்கும் இடத்தை நோக்கி உதவி கேட்டு கூக்குரலிட்டவாறு ஓட, கூடவே கூலிப்படையும் துரத்திக் கொண்டு வந்தது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் நாராயணராவ் பேஷ்வாவை வழியில் ஒரு குற்றேவல் வேலைக்காரன் தடுத்து நிறுத்த, கூலிப்படைத் தலைவன் சுமர் சிங் கார்டி தன் வாளால் வெட்டிக் கொன்றான். நாராயண பேஷ்வாவின் உடல் ரகசியமாக மூலமுத்தா நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது. உண்மையில் ரகுநாதராவ் தன் அண்ணன் மகனைக் கொல்ல விரும்பவில்லை என்றும் தன்னை வீட்டுக் காவலில் இருந்து மீட்டு நாராயண ராவைச் சிறைப்பிடித்தால் போதும் என்றுதான் கூலிப்படைத் தலைவன் சுமர் சிங் கார்டிக்குக் கடிதம் எழுதியதாகவும், கடிதத்தை ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ரகுநாதராவின் மனைவி  ஆனந்திபாய் இடைமறித்துநாராயணராவ் தாரா”(Narayana rao la Dharaa) தாரா என்றால் சிறைப்பிடி என்பதை  நாராயணராவ் மாரா” ”(Narayana rao la maaraa) மாரா என்றால் கொன்று விடு என்று திருத்தி விட்டார் என்றும் இதனால் ஏற்பட்ட குழப்பமே பேஷ்வா நாராயணராவின் மரணத்திற்குக் காரணமானது ஒரு கதை சொல்லப்படுகிறது.  
கொலை செய்யப்பட்ட நாராயணராவின் சடலம் கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டு , அத் துண்டுகளை ஒரு  பானையில் வைத்து ரகசியமாக பேஷ்வாக்களின் காமக்கிழத்திகள் வந்து போகும் தெற்கு நோக்கிய வாசல் ஜம்புல் தர்வாஜா (Jambhul darwaja) வழியாக எடுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் இவ்வாயில் நாராயணா தர்வாஜா என்று பேரிட்டு வழங்கப்படுகிறது.
 





சனிவார்வாடா ஆவி உலாவும் பேய் மாளிகையாகச் சித்தரித்துக் கதைகள் 
சொல்லப்படுகிறது. அமாவாசை நாட்களில் நாராயணராவின் ஆவி உதவி கேட்டு  ஓலமிடுவதாக பிரபலமான வதந்தி பரவியுள்ளது. சனிவார்வாடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேலை செய்யும் பலர் காகா மாலா வாச்வா” (சித்தப்பா என்னைக் காப்பாற்றுங்கள்) என்று கொல்லப்பட்ட நாராயணராவ் அரற்றுவது போன்ற குரல் ஒலியைக் கேட்டதாகச் சொல்லிப் பதிவிட்டுள்ளனர்.









Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)