வெற்றி பெற்றும் தோற்றவன்

பள்ளியில் படிக்கும் காலத்தில் படிப்பில் படு சூட்டிகையாக விளங்கிய மாணவன் ஒருவனைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

அவன் என்று குறிப்பிடுவதில் பல சௌகரியங்கள் உள்ளதால் பெயரில்லாமலேயே கதாநாயகனைப் பற்றிப் பேசுவோம். பள்ளியில் நடக்கும் எல்லாத் தேர்வுகளிலும் கணக்கிலும் அறிவியலிலும்  அவன் 100/100 பெறத் தவறியதே இல்லை.

இந்திய தொழில் நுட்பக் கழகம் அதாவது நாம் ஐ.ஐ.டி என்று சொல்கிறோமே அந்தக் கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதி மிகச் சிறந்த மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி சென்னை ஐ.ஐ.டி யில் சேர்ந்தான்.

அடுத்து அங்கே இளநிலைக் கல்வி கற்ற பின் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப்பட்டம் அதுதான் எம்.பி.ஏ வை அமெரிக்காவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்தான். அமெரிக்காவிலேயே கொழுத்த சம்பளத்தில் வேலையும் கிடைக்கவே அங்கே குடியேறினான். அப்புறம் நல்ல அழகான தமிழ் நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு இனிய இல்லறம்.

வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியவன் ஐந்து படுக்கையறை வீடும் விலையுயர்ந்த சொகுசு காரும் வாங்கினான்.

எல்லாம் இப்படியாக நல்லபடியாகவே போய்க்கொண்டுதான் இருந்தது.

திடிரென சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் தன் மனைவி குழந்தைகளைச் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டான்.

எல்லாம் சரியாகவே இருப்பதாகத் தோன்றியதே. எங்கே எப்படி என்ன  தவறு நேர்ந்தது? ஒன்றும் புரியவில்லை.

இந்த நிகழ்வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கலிஃபோர்னியாவின் மருத்துவ உளவியல் நிறுவனம் தவறாகப் போன வாழ்க்கையின் காரணத்தைக் கண்டறிந்தது.

ஆராய்ச்சியாளர்கள் அந்த மனிதனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்தனர். அப்போது அவன் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையை இழந்து பல மாதங்கள் வேலையின்றி இருந்ததை அறிந்து கொண்டனர்.

தனது முன்னாள் ஊதியத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இருந்த போதும் சரியான வேலை ஏதும் திகையவில்லை. வீட்டுக் கடன் தவணைகள் கட்டுவது நின்று போக வீட்டை இழக்க வேண்டியதாயிற்று.

குறைந்த கையிருப்பை வைத்து அப்படியும் இப்படியுமாகச் சில மாதங்களை ஓட்டியாயிற்று. இனியும் வேறு வழியில்லை என்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவெடுத்தனர்.

அதன்படி மனைவி , குழந்தைகளை துப்பாக்கிக் குண்டிற்கு இரையாக்கிய பின் தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்தான்.

இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கான ஆய்வு முடிவுகள் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

அவன் ஒரு இயந்திரம் எப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறதோ அது போல வெற்றி பெறுவதற்காக மட்டுமே தயார் செய்யப்பட்டவன். தோல்வி ஏற்படும் நிகழ்வுகளைக் கையாள எந்தவிதமான பயிற்சியும் தரப்படாதவன்.

இப்போது நம் முன் உள்ள பெரிய வினா, ஒரு பெரும் வெற்றியாளன் ஒருவன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய சூழல்கள் என்ன எனபதுதான்.

முதலாவதாக  நிறையப் பேர் ஒரு வெற்றியாளன் பழகிக் கொள்ள வேண்டிய பழக்கங்கள் பற்றி பேசுவதற்கு உள்ளனர். ஆனால் இன்று  நான் சொல்லப் போவது நீங்கள் தேவையான எல்லாவற்றையும் அடைந்து விட்ட பின்னர் கூட அடைந்த அனைத்தையும் முற்றிலுமாக இழக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அடுத்த பொருளாதார நெருக்கடி எப்போது உலகைத் தாக்கும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று.

அப்படியாகப்பட்ட ஒரு சூழலில் ஒரு வெற்றியாளனுக்கு அதி அவசியமாகத் தேவையான பழக்கம் தோல்விகளைக் கையாளுவது குறித்த சரியான பயிற்சியே.

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் குழந்தைகளை வெற்றிக்காக மட்டுமே தயார் செய்து பழக்கப்படுத்தாதீர்கள். கூடவே தோல்விகளை எப்படி எதிர் கொள்வது எப்படிக் கையாள்வது என்ற முறையான  வாழ்க்கைப் பாடங்களையும் தவறாமல் கற்பியுங்கள்.

உயர்நிலை கணிதமும் அறிவியலும் கற்றல் என்பது போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களுக்கு உதவலாம். ஆனால் வாழ்க்கை பற்றிய அறிவு மட்டுமே அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் ஆற்றலைத் தரும்.

பணத்துக்காக எப்படி வேலை செய்ய வேண்டும் என்று கற்றுத்தராதீர்கள். மாற்றாக பணம் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளின் பேரார்வம் எதில் உள்ளது என்பதைக் கண்டறிய உதவுங்கள். ஏனென்றால் அவர்கள் பெறக் கூடிய பல்கலைக்கழகப் பட்டங்கள் எதுவுமே இனி பின்னொரு நாளில் உலகை உலுக்கப் போகும் வாய்ப்புள்ள பொருளாதாரச் சிக்கலின் போது நிச்சயமாக உபயோகப்படப் போவது இல்லை.

மேற்கண்ட சிறு கட்டுரை ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப் பில் வந்தது. அதனை சிறிய மாற்றங்களுடன் தமிழில் மொழி மாற்றம் செய்து பதிவிட்டுள்ளேன்.

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)