டி.என்.ஏ(DNA) - பகுதி (3)

பெரும்பாலான பிறழ்வுகள் டிஎன்ஏ தன்னைத் தானே பிரதி எடுக்கும் போது ஏற்படும் தவறுகளால் உருவாகின்றன. அதாவது அரசாங்க அலுவலகங்களில் பழைய ஆவணங்களைப் பிரதி எடுக்கும் போது பிழைகள் ஏற்படும் அல்லவா. அதேபோல் டி.என்.ஏ தங்களைப் பிரதி எடுக்கும் போதும் பிறழ்வுகள் ஏற்படும். 

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு  பத்திரிக்கையில் (துக்ளக் என்று நினைக்கிறேன். எழுதியவர் பெயர் ஞாபகம் இல்லை) அரசு அலுவலக செயல்பாடுகள் பற்றிய சுவாரசியமான சிறுகதை படித்தேன். அதில் ஒரு அரசு நிறுவனத்தில்  "மராமத்து" செய்தது குறித்த தகவலைப் படியெடுத்த அலுவலர் அதனைப் பிழையாக "மரமத்து" என்று படியெடுத்து விடுவார். அந்தப் பிழை மாற்றப்படாமல் தொடர்ந்து பின்னாட்களில் அப்படியே பிரதி எடுக்கப்படும். அரசின் ஆவணங்களைத் திருத்துவது கடுமையான குற்றம் என்பதால் எந்த அதிகாரியும் இது "மராமத்து" என்பதுதான் தவறாக "மரமத்து" என்று உள்ளதென அறிந்திருந்தும் மாற்றத் துணியவில்லை. ஆகவே இரு தலைமுறைகளாக "மரமத்து" என்றே அரசு ஆவணங்களில் குறிக்கப்பட்டு இருக்கும். ஒரு ஊழல் பெருச்சாளி  அதிகாரி புத்திசாலித்தனமாக அலுவலகத்தின் "மரமத்து" மிகவும் பழையதாகி விட்டது. அதை புதுப்பிக்க இயலாது என்பதால் புதியதாக மரமத்து செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைச்சர் தலைமையில் அமைத்து அயல்நாடு ஒன்றில் "மரமத்து" செய்யும் தொழில்நுட்பத்தை அறிய வேண்டும் என்று குறிப்பு எழுதி அந்தக் கால மதிப்பில் ஐந்து இலட்சத்திற்கு உத்தேச செலவு அறிக்கையும்  அனுப்புவார். இப்படிக் கதை வளரும். நிற்க, நம் நோக்கம் பிறழ்வு பற்றி அறிவது என்பதால் மீண்டும் கட்டுரைக்கு வருவோம்.    

இருப்பினும் சில வகையான பிறழ்வுகள் தன்னிச்சையாக அல்லது தீங்கு விளைக்கும் கதிர் வீச்சுகள் மற்றும் இரசாயனங்களின் விளைவாக ஏற்படுகிறது. மனித இனத்தில் ஒரு தலைமுறையில்  ஒரு தனித்த மனித மரபணுத்தொகை (genome) யில் கிட்டத்தட்ட 70 நுக்ளியோடைடு மாற்றங்கள் ஏற்படும். ஒரு மரபணுத் தொகையின் சிறிய பகுதி ஆறு பில்லியன் எழுத்துக்களால் சுட்டப்படுகிறது ( A T G C ) என்றாலும் பல தலைமுறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாறுபாடுகள் பரிணாமத்தில் ஏற்படும்.  

நிறப்புரி பிறழ்வுகளின் முக்கியமான  வகைகள் கீழே காட்டப்பட்டுள்ளது.




 மாறுபட்ட மக்கள் கூட்டங்களுகிடையே மரபணு ஓட்டம் (GENE FLOW) மொசைக் வம்சாவளி (mosaic ancestry) குரோமோசோம்கள் உருவாக வழி வகுக்கிறது. மொசைக் வம்சாவளி என்றால், ஒரு நேரத்தில் உடலின் ஒரு பகுதியில் மாற்றம் ஏற்படும் போது அது போன்ற மாற்றம் உடலின் பிற பகுதிகளில் ஏற்படாது. ஒவ்வொரு தலைமுறையிலும் மறு இணைவு (RECOMBINATION) ஏற்படுவதால், நவீன மனித மரபணுக்களில் நியாண்டெர்தால் வம்சத்தின் துண்டுகள் காலப்போக்கில் சிறிது சிறியதாக உடைந்து  மாற்றமடைந்துள்ளன. 

பிறழ்வு மற்றும் மறு இணைப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மரபணு மாற்றங்கள் இரண்டு தனிதன்மை பொருந்திய கடிகாரங்களை நமக்கு தந்துள்ளன. இவை இரண்டுமே வெவ்வேறு பரிணாம நிகழ்வுகள் மற்றும் காலக்கெடுக்களை மதிப்பிடுவதற்கு ஏற்றவை. மரபணுப் பிறழ்வுகள் மிகவும் மெதுவாகவே சேகரமாகிறது எனவே பிறழ்வுக் கடிகாரம் இனங்களின் இடையேயான பரிணாம பிரிவுகளைப் போன்ற மிகவும் பண்டைய நிகழ்வுகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்றால், மறு இணைதல் கடிகாரத்தின் டிக்,டிக் துடிப்புகள் கடந்த 100,000 ஆண்டுகளுக்குள் அமைந்த கால அளவுகளுக்கு பொருத்தமான விகிதத்தில் ஏற்படுகிறது. "சமீபத்திய" நிகழ்வுகள் (பரிணாம நேர அலகில்)என்று குறிப்பிடப்படும் நிகழ்வுகளில் தனித்ததோர் மனித கூட்டத்தின் மரபணு ஓட்டம், கைக் கொள்ளப்பட்ட நற்பழக்கங்களின் உயர்வு அல்லது மரபணு நோய்களின் வெளிப்பாடு போன்றவைகள் அடங்கும். எவ்வாறு பிறழ்வு மற்றும் மறு இணைவு கடிகாரங்களை ஒன்றாகப் பயன்படுத்தினால் மூதாதைய உறவுச் சிக்கலின் முடிச்சுக்களை எப்படி அவிழ்க்க முடியும் என்பதை நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வு விவரிக்கிறது.  நியாண்டர்தால் மனிதர்களுக்கும் மற்றும் நவீன மனிதர்களுக்கிடையே 1.5-2 மில்லியன் பிறழ்வு வேறுபாடுகள் இருப்பதாக மரபியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைக்கு பிறழ்வு கடிகாரத்தை பயன்படுத்துவதன் மூலம், குழுக்கள் ஆரம்பத்தில் 750,000 மற்றும் 550,000 ஆண்டுகளுக்கு முன்பு  பிரிந்திருப்பதாகக் கருதுகின்றன.

நவீன மனிதர்கள் யுரேஷியாவிற்கு பரவி அப்படியே நியாண்டர்தால்களுடன் உறவு கொண்டனர். இன்றைய மறு இணைவுக் கடிகாரத்தைப் பிரயோகித்து நியாண்டர்தால் மனிதனின் டி.என்.ஏ எந்த அளவில் நவீன நாகரீக மனிதனிடம் உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டதில் இவ்விரு மனிதக் குழுக்களும் சுமார் 40000 முதல்  54000 ஆண்டுகள் முன்பு கலந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ரோமானியா நாட்டின் பெஸ்தரா கியு ஓஸ் (Peştera cu Oase) என்ற பகுதியின் குகைகளில் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஹோமோசேப்பியன்களின் படிமங்களைப் பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் ஓஸ் (oase) மனிதனிடம் பெருமளவுப் பகுதிகளில் நியாண்டர்தால் மனிதனின் வம்சாவளி மரபணுத் தொகுதியில் பொதிந்து காணப்படுவதால் ஓஸ் இன மனிதனுக்கு நான்கு முதல் ஆறு தலைமுறைக்கு முந்தைய மூதாதைதான் நியாண்டர்தால்கள் என்று கூறுகின்றனர்.  வேறு வகையில் சொல்லப்போனால் ஓஸ் களின் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் நியாண்டர்தால் மனிதனாக இருந்திருக்க வேண்டும்.



40000 வருடம் முன் வாழ்ந்த ஓஸ் மனித படிமத்தின் நிறப்புரி 6, தற்கால மனிதனின் நிறப்புரியுடன்  ஒப்பிடப்படுகிறது. படத்தில் காணப்படும் நீல நிறப் பட்டைகள் நியாண்டர்தாலின் டி.என்.ஏ துண்டுகளாகும். ஓஸ் மனிதனில் காணப்படும் துண்டுகள் சற்றே வடிவில்  நீளமானவை ஏனெனில் இவர்கள் நியாண்டர்தால்களின் நான்கு முதல் ஆறு தலைமுறைக்குப் பிந்தைய சந்ததியினர் என்று மறு இணைவுக் கடிகாரம் மூலம் உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


தொடரும்....





Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)