வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (15)

                                                           மேற்குறிப்பிட்ட இரு வகையான பெரு நோவாக்களைத் தூண்டும் உந்து சக்தி எது ?என்பதை அறிய முன்னர் கூறிய கருத்துக்களை மீண்டும் நினைவு கூர்வோம். 


முதல் வகை பெரு நோவா, தொடக்கத்தில் இரட்டை விண்மீன் ஒன்றின் வெள்ளைக்குள்ளனாக இருந்து அதன் கூட்டாளியான சிவப்பரக்கனின் பொருளை ஈர்ப்பதால் அளவில் பெரியதாகிக் கொண்டு வரும். ஒரு கட்டத்தில் இவ் வெள்ளைக் குள்ளனின் நிறை 'சந்திர சேகர் எல்லை' நிறையை விட அதிகமாகும் பொழுது ,உட்புற அழுத்தம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிப்பதன் காரணத்தால் வன்மையாக வெடித்து பெரு நோவா ஆக மாறுகிறது.






Image courtesy : https://people.highline.edu



இரண்டாம் வகை பெரு நோவா தனது வாழ்க்கையை மிக அதிக நிறை கொண்ட விண்மீனாகத் தொடங்குகிறது.அதாவது அதன் நிறை கதிரவனின் நிறையைப் போல 9 முதல் 30 மடங்காக இருக்க வேண்டும். 

இத்தகைய பேரரக்க (Super Giants) விண்மீன்கள் பொதுவாக 10 மில்லியன் ஆண்டுகள் வாழ்னாளைப் பெற்றிருக்கும். மற்ற சாதாரண விண்மீன்களில் நிகழ்வதைப் போலவே இவற்றிலும் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைவதால் ஹீலியம் அணுக்கரு உருவாகும் வினையே நடைபெறுகிறது. இருப்பினும் அவற்றின் அதிகமான நிறை முந்தைய வினையை தொடர அடிகோலுகிறது. இதனால் ஹீலியம் அணுக்கருகளின் இணைவு நிகழ ஆரம்பிக்கிறது. இடைவிடாத ஈர்ப்பு விசையின் காரணமாகத் தோன்றும் அழுத்தம் விண்மீனின் உட்புற வெப்ப நிலையை 1900 மில்லியன் கெல்வின் அளவுக்கு உயர்த்துகிறது.இதனால் மேலும் புதிய கனமான தனிமங்கள் உருவாக வழியேற்படுகிறது.




இறுதியில் விண்மீனின் வாழ்வு முடியும் தறுவாயில் அதன் உட்புறம் வெங்காயத்தைப் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும். உள்ளே மையப்பகுதியில் இரும்பும் அடுத்தடுத்த கூடுகள் முறையே சிலிக்கன்,ஆக்ஸிஜன்,நியான், கார்பன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றாலும் புறவெளிக்கூடானது ஹைட்ரஜனாலும் நிரம்பி இருக்கும்.மையத்தில் சேகரமாகும் இரும்புதான் விண்மீனின் வாழ்வு முடிவதற்குக் காரணமாக அமைகிறது.ஏனெனில் இரும்பு அணுக்கரு இணைவில் ஈடுபடும் பொழுது ஆற்றல் வெளியாவதற்குப் பதிலாக உட்கவரப் படுகிறது. எனவே மையப் பகுதியில் வெப்பம் குறைந்து நெருப்பு அணைந்ததும், ஈர்ப்புவிசையின் காரணமாக ஏற்படும் குலைவைத் தடுக்கக் கூடிய எந்த ஒரு எதிர் விசையும் இருக்காது.எப்படி ஒரு கட்டடத்தைத் தாங்கும் அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் அதன் மேற் கூரை மிக விரைவாகச் சரியுமோ ,அதே போல விண்மீன் சில நொடிகளில் முழுவதுமாகக் உருக்குலைந்து இறுக்கப் படுகிறது. அவ்வாறு இறுகி விண்மீனின் உட்கருவின் அடர்த்தி அணுக்கருவின் அடர்த்தியைப் போல் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கும்.



Image courtesy : https://people.highline.edu


ஆனால் இந்த நிலை அதிக நேரம் நீடித்திருப்பதில்லை.ஒரு நொடியில் நூற்றில் ஒரு பங்கு காலத்திற்கும் குறைவான கால அளவில் மீண்டெழும் உட்கரு அதிர்வு அலைகளை(Shock Waves) மிக விரைவாக வெளிவிடத் தொடங்கும். அவ்வாறு வெளிவரும் அதிர்வலைகள் நொடிக்கு 180,000 கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்பட்டு விண்மீனின் வெளிக்கூட்டைத் தகர்த்துக் கொண்டு , மிகப்பொலிவுடன் எரிந்து பெரு நோவா ஆக நமக்குக் காட்சி தருகிறது.இந்த வெடிப்பானது மிக வலிமையானதென்பதால் வெளிக் கூட்டில் இருந்த லேசான தனிமங்கள் அணுக்கரு இணைவு வினையில் ஈடுபட்டு புதிய தனிமங்களான கால்சியம், யுரேனியம் மற்றும் காரீயம் போன்றவற்றை உருவாக்கும். உருவாக்கப்பட்ட இப் புதிய தனிமங்கள் விண்வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.

இரண்டாம் வகை பெரு நோவா பொதுவாக எச்சங்களை விட்டுச்செல்லுகிறது. அப்படி விட்டுச்செல்லும் எச்சங்கள் கூட மீண்டும் அதன் நிறையையே சார்ந்தமைகிறது.




கதிரவனைப் போல் 10 முதல் 20 மடங்கு நிறை கொண்ட விண்மீன் தரும் இந்த எச்சம் முழுக்கமுழுக்க நியூட்ரான்களால் ஆன பொருளாகும். இப் பொருளானது சுமார் 30 கிலோமீட்டர் விட்டத்தையும் ,ஒரு தீப்பெட்டியின் கனத்தில் 10 மில்லியன் டன் நிறை என்ற அளவிற்கு அடர்த்தியையும் உடையதாக விளங்கும்.இத்தகைய நியூட்ரான் விண்மீன்களின் வினோதத்தன்மை என்னவென்றால் இவைகள் ஒளிக்குப் பதில் ரேடியோ அலைகளைத் துடிப்புகளாக (Pulses ) வெளித்தருகின்றன. இக் காரணத்தால்தான் இவை பல்சார்(Pulsars ) என்றழைக்கப் படுகின்றன.


1967 ஆம் ஆண்டில் ஜோஸ்லின் பர்னெல்(Jocelyn Burnell ) என்ற ரேடியோ வானியலாளரால் முதல் பல்சார் கண்டுபிடிக்கப் பட்டது. 

ஜோஸ்லின் பர்னெல்(Jocelyn Burnell )

அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சோதனைகள் மேற்கொண்டிருந்த பொழுது ஒவ்வொரு 1.3 வினாடி கால இடைவெளியிலும் திரும்பத்திரும்ப ரேடியோ சைகைகளைப் பெற்றார்.மேலும் இந்த சைகைகள் ஆச்சரிய மூட்டும் வகையில் மிக ஒழுங்கான கால இடைவெளியில் பெறப்பட்டதால் முதலில் வேற்றுக்கோள்கள் எதிலாவது வசிக்கும் நம்மை விட அதிக அறிவுள்ள உயிரினம் (Alien Civilization) அனுப்பும் சைகையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.



ஆனால் விரைவிலேயே மேற்கூறிய ஐயப்பாடு சரியில்லை என்பது கண்டறியப்பட்டது. மிகச் சரியான இடைவெளியில் புவியில் பெறப்படும் இது போன்ற ரேடியோ சைகைகள் சுழலும் நியூட்ரான் விண்மீன் வெளியிடும் சைகைகளே என்பது கண்டறியப்பட்டது. நியூட்ரான் விண்மீனைச்சுற்றியுள்ள வலிமை மிக்க காந்தப்புலமே இதற்குக் காரணமாகும்.


கதிரவனைக் காட்டிலும் 30 முதல் 50 மடங்கு நிறையுடைய விண்மீனின் தலையெழுத்து இன்னும் வினோதமானது. அதன் உள்ளகம் அதிகமாக இறுக்கப்படுவதால் அடர்த்தி அதிக அளவிற்கு உயர்கிறது. 
இதன் காரணமாக ஈர்ப்பு விசை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதால் ஒளி கூட அதன் ஈர்ப்பிலிருந்து தப்ப முடியாது. 


இதனை கருந்துளை (BLACK HOLE) என்கிறோம்.
கருந்துளையிலிருந்து ஒளி முதல் எதுவும் வெளிவரமுடியாது என்பதால் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் வானவியலாலர்கள் இத்தகைய கட்புலனாகாத பொருட்களின் இருப்பிடத்தையும் அவற்றின் ஈர்ப்பு மற்றும் அவற்றின் அருகிலமைந்த பிற வீண்மீன்களின் மீதான தாக்கம் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்கின்றனர்.

பெரு நோவாக்கள் ஒரு வகையான விசித்திரமான பொருட்கள் எனலாம். ஏனெனில் நமது இந்த ஊன் உடம்பு ஆக்கப்பட்ட எல்லாத் தனிமங்களும் கூட விண்மீன் தூசு (STAR DUST) வழியாகத்தான் உருவாக்கம் பெற்றுள்ளன. அண்டத்தில் நாம் காணும் கனமான தனிமங்கள் அனைத்துமே எப்போதோ பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பெரு நோவா வெடிப்பின் பொழுது உருவாகி இப்பொழுது நம்மிடம் இருக்கிறதெனக் கூறலாம்.

கார்பன்,நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன்,எலும்பிலுள்ள கால்சியம் இரத்தத்திலுள்ள இரும்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் அனைத்துமே கணக்கிலடங்காத காலத்திற்கு முன்பு இறந்து போன விண்மீனின் எச்சங்களே என்பதுதான் உண்மை. அப்படிப் பார்க்கும் பொழுது விண்மீன் தூசியிருந்து உருவாகி மீண்டும் விண்மீன் தூசியையே நாம் அனைவரும் அடைவதுதான் மனித வாழ்வின் விதி என்றால் அதில் மிகைப்படுத்தல் எதுவுமில்லை.

தொடரும்........

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)